மும்பை: 2027 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன் தோனி ஆதரவு அளித்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் அடுத்த 50 ஓவர் உலககோப்பையில் விளையாடும் போது 39 வயதையும், விராட் கோலி 38 வயதையும் தொடுவார்கள்.
இதனால், இருவரையும் நீக்கிவிட்டு, இளம் வீரர்களை கொண்ட அணியை உருவாக்க கம்பீர் திட்டமிட்டு வருகிறார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 44 வயதிலும் விளையாடும் தோனி, ரோகித், கோலிக்கு ஆதரவாக பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் வீரர்களின் எதிர்காலத்தை வயது அல்ல, ஆட்டத்திறன் மற்றும் உடல் தகுதியே தீர்மானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய நிகழ்வொன்றில், 30களில் உள்ள அனுபவமிக்க வீரர்களை எளிதாக ஒதுக்கிவிடக் கூடாது என்று தோனி தெளிவுபடுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இருவரும் விலகியதால், அவர்கள் மீதான விமர்சனம் அதிகரித்த சூழலில் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய தோனி, “அடுத்த உலகக் கோப்பையில் விளையாட ஏன் கூடாது? வயது ஒரு அளவுகோல் அல்ல, ஆட்டத்திறன், உடல் தகுதியே முக்கிய அளவுகோல்கள்” என தோனி பதில் அளித்தார். வயது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வீரரை எடைபோடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
உடல் தகுதியின் அவசியத்தை விளக்கிய தோனி, “22 வயதாக இருந்தாலும், உடல் தகுதி இல்லாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது,” என்றார். வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்காகப் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர்கள் ஏன் விளையாடக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உலகக் கோப்பை வென்ற கேப்டன் தோனி, இளம் அணியில் அனுபவமிக்க வீரர்களின் மதிப்பை வலியுறுத்தினார். “சச்சின் டெண்டுல்கர் போன்றோர் டிரஸிங் ரூம்மில் ஒருவர் இல்லாவிட்டால் 20 வயதில் உள்ள வீரருக்கு எப்படி அனுபவம் கிடைக்கும்,” என்று கேள்வியை எழுப்பினார்.
“சிறப்பாகச் செயல்பட்டால் வீரர்கள் அணியில் தொடர்வார்கள். உடல் தகுதி இல்லாவிட்டால் நீக்கப்படுவார்கள். ஆனால் உலககோப்பை போன்ற பெரிய போட்டிகளில் சீனியர் வீரர்களின் அனுபவம் கண்டிப்பான தேவை” என்றும் தோனி கூறினார். ரோஹித், கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சூழலில் இக்கருத்துக்கள் வந்துள்ளன.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து, கோலி 9 போட்டிகளில் 88 சராசரியுடன் 616 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் ஷர்மா 51 சராசரியுடன் 409 ரன்கள் சேர்த்துள்ளார். ஜூலையில் இங்கிலாந்தில் அடுத்த ஒருநாள் தொடர் நடைபெற உள்ள நிலையில், தோனியின் இந்த கருத்தை கோலி, ரோகித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு கம்பீர் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.