இதுதான் கேப்டன் கூல்.. 13 வருடங்களுக்கு பிறகு பழைய வாழ்க்கைக்கே திரும்பிய டோணி!
கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மனம், அவரது பழைய ரயில்வே வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறது என்பதை வெளிக்காட்டும்விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர் டோணி. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பாக அவர் கொல்கத்தா, ஹவுரா ரயில் நிலையத்தில் டிக்கெட் சோதனை செய்யும் பணியாற்றி வந்தார்.
கிரிக்கெட் உலகத்திற்குள் நுழைந்தது முதலே டோணிக்கு ஏற்றம்தான். சச்சினுக்கு பிறகு விளம்பர வருவாயிலும் கொடிகட்டி பறந்த வீரர் டோணிதான். உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என பலவற்றிலும், இந்தியா வெற்றி வாகை சூட வைத்தவர் டோணி.

கேப்டன் பதவிகள்
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த டோணி, சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியையும் துறப்பதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக கேப்டனாக செயல்பட்ட டோணி அதிலிருந்தும் விலகுவதாக விரும்பியதை தொடர்ந்து விலக்கிக்கொள்ளப்பட்டார்.

உள்நாட்டு கிரிக்கெட்
இந்நிலையில், உள்நாட்டு அணிகள் பங்கு பெறும், விஜய் ஹசாரே தொடர் போட்டியில் சொந்த மாநிலம் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோணி செயல்பட உள்ளார். 25ம் தேதி அந்த அணி, கர்நாடகாவை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்க உள்ளது.

போட்டோ
இதில் பங்கேற்க ஜார்கண்ட் அணி வீரர்கள் ஹட்டியா (ராஞ்சி அருகேயுள்ள நகரம்) நகரிலிருந்து ஹவுரா செல்லும் ரயிலில் பயணித்தனர். அதே ரயிலில் டோணியும் சக வீரர்களுடன் கொல்கத்தா சென்றார். இந்த பயணத்தை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் டோணி.

என்ஜாய்
"நான் 13 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணித்துள்ளேன். நீண்ட பயணம் என்றாலும் என்ஜாய் செய்கிறேன். எனது டீம் உறுப்பினர்களோடு உரையாடியபடி என்ஜாய் செய்கிறேன்.." என்று டோணி கூறியுள்ளார். டோணியிடம் விலை உயர்ந்த ஹம்மர் வகை கார்கள் உள்ளன. நினைத்தால் ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு விமானத்திலும் சென்றிருக்கலாம். ஆனால் டோணி எளிமையாக ரயில் பயணம் மேற்கொண்டார். ஏசி முதல்வகுப்பு பெட்டி என்றபோதிலும், அவரிடமுள்ள பணத்திற்கு சுமார் 10 மணி நேர பயணத்தை அவர் ரயிலில் மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. கடந்த கால நினைவுகளை அசைபோட இந்த ரயில் பயணம் டோணிக்கு உதவியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications