சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடையே என்ன வித்தியாசம், யார் போட்டிகளுக்கு முன் திட்டமிடுவதில் கில்லாடி என்பது குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் தோனி மற்றும் விராட் கோலியை விட ரோஹித் சர்மா கேப்டனாக தனது பணியை தீவிரமாக எடுத்துக் கொண்டு திட்டமிடுவார் என கூறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் முக்கிய காரணம்.

தோனி இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பைகள், சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக இருந்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற சிறந்த வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களை மெருகேற்றினார். அடுத்து விராட் கோலி பெரிய கோப்பைகளை வெல்லாத போதும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றினார். மேலும், உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி மாநில அளவிலும் கூட கிரிக்கெட் வீரர்களிடையே அதை செய்ய வைத்தார்.
அடுத்து ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆனபின் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்றதோடு, மூன்று வித போட்டிகளிலும் முன்னணியில் உள்ளது. இவர்கள் மூவரின் கேப்டன்சியின் கீழும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் அவர் அது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். "தலைமை என்பது ஒரு பதவி மட்டுமல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் தலைமை. எந்த பதவியும் இல்லாமல் நீங்கள் அணியை வழி நடத்துவதும் தலைமை தான்."
"தோனியின் கேப்டன்சியில் நான் அதிகம் விரும்புவது அவர் வீரர்களுக்கு அளித்த நிலையான வாய்ப்புகளை தான். ரவீந்திர ஜடேஜாவுக்கு அவர் ஃபினிஷர் ஆக தன்னை உருவாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகளை அளித்தார். அந்த வாய்ப்புகளில் இருந்து ஜடேஜா பலனடைந்தார். இன்று ஒரு முழு ஆல் ரவுண்டராக இருக்கிறார். தோனி ஒரு திறமையாளரை கண்டுபிடித்து விட்டால், அவருக்கு ஆதரவளித்து நிலையாக அவர் ஆடுவதற்கு உதவி செய்வார்."
"விராட் கோலி மற்ற வீரர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் அவர் தானே ஒரு முன்னுதாரணமாக நின்று அணியை வழி நடத்தினார். அணியில் இருந்து என்ன வேண்டுமோ, அதை அவரே செய்து காட்டினார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் நான் நிறைய விஷயங்களை விரும்புகிறேன். அவர் அணியின் சுற்றுச்சூழலை எளிதாக மாற்றி வைத்துக் கொள்வார். அதற்கு அவர் அதிக முயற்சிகளை எடுப்பார்."
"ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக நடுநிலையாக இருப்பதோடு, வியூகம் வகுப்பதிலும் அற்புதமாக செயல்படுகிறார். தோனியும் வியூகம் வகுப்பதில் வல்லவர் தான். விராட் கோலியும் அப்படித்தான். ஆனால், ரோஹித் வியூகம் வகுப்பதற்காக நிறைய நேரங்களை எடுத்துக் கொள்வார். அவர் பயிற்சியாளர்களோடும், தொழில்நுட்ப குழுவினரோடும் அமர்ந்து வியூகங்களை வகுப்பார். முக்கிய போட்டிகளுக்கு முன் அவர் இதை செய்வார். மேலும், வீரர்களுக்கும் ஆதரவு அளிப்பார்." என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.