மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய அணி வீரர் ஷர்துல் தாக்குரிடம், ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய இருவரில் சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வேடிக்கையான பதில் ஒன்றை கூறினார். அதை தோனி மற்றும் ரோஹித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றால் பலரும் இன்று வரை தோனியின் பெயரை தான் கூறுவார்கள். அதே சமயம் அவருக்கு அடுத்து ரோஹித் சர்மா இந்திய அணியை மிக சிறப்பாக வழி நடத்தி வருகிறார். தோனியை காட்டிலும் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் அதிக வெற்றிகளை கேப்டனாக பெற்றுக் கொடுத்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

எனினும், இந்திய அணிக்கு அதிக ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தது தோனி தான். அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை, மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய மூன்று தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக கோப்பை வென்று கொடுத்தார்.
அதே சமயம் ஐசிசி தொடர்களில் இந்திய அணியை மூன்று முறை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று, அதில் ஒரு முறை கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார் ரோஹித் சர்மா. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 2023 ஒரு நாள் உலகக் கோப்பையின் இறுதி போட்டி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை வெற்றி ஆகியவை ரோஹித் சர்மாவின் சாதனையாக உள்ளது.
இது போன்ற ஒப்பீடுகள் ரசிகர்களால் விவாதிக்கப்பட்டாலும் இருவருமே தங்கள் காலத்தின் சிறந்த கேப்டன்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில், இவர்கள் இருவரின் கீழும் நீண்ட காலமாக ஆடிய அனுபவம் கொண்டவர ஷர்துல் தாக்குர். தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் ஆடி இருக்கிறார். இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் கீழும் அவர் ஆடி இருக்கிறார்.
ஒரு பேட்டியின் போது இவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன்? என ஷர்துல் தாக்குரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ரோஹித் எனது நண்பர். அதனால், நான் தோனியை தான் சிறந்த கேப்டனாக தேர்வு செய்வேன். ரோஹித் இதை புரிந்து கொள்வார். அவர் என் மீது கோபப்பட்டாலும், நான் அவரை சமாளித்து விடுவேன். இந்த வீடியோ ரோஹித் கைகளுக்கு சென்றாலும் எனக்கு கவலை இல்லை. அவர் எப்போதும் போல தான் இருப்பார். நான் அவரை போனில் பேசி சமாளித்து விடுவேன்." என வேடிக்கையாக கூறினார். இந்த பதிலை ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.