சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக வர வாய்ப்புள்ள வீரராக கூறப்பட்டும் இந்திய அணியில் கூட இடம் பெறாத நிலையில் இருந்தார் சிவம் துபே. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் அவர் சேர்ந்த பின் அந்த நிலை மாறி உள்ளது. அதற்கு தோனி அவருக்கு சொல்லிக் கொடுத்த ஒரு சின்ன விஷயம் தான் காரணம் என கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சிவம் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். அப்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக முக்கிய இடத்தை பெற்று இருந்தார். அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பெறும் அளவுக்கு திறன் கொண்ட வேறு வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் என யாருமே இல்லாத நிலை இருந்தது. ஆனால், சிவம் துபே அதை மாற்றுவார் என கூறப்பட்டது. ஹர்திக் பாண்டியா போலவே சிவம் துபேவும் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் பலரும் துபே மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

விராட் கோலியின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியில் சிவம் துபே இடம் பெற்றார். சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடிய அவர், தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பினார். அதனால், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. அதன் பின் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே இடம் பெற்றார். அவரை பேட்டிங்கில் மட்டுமே பயன்படுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி முடிவெடுத்தார். மற்ற அணிகள் துபேவை பகுதி நேர பந்துவீச்சாளராக பார்த்த நிலையில், தோனி அவரை வேறு விதமாக பார்த்தார்.
சிவம் துபேவின் அதிரடி பேட்டிங்கில் ஒரு பிரச்சனை இருந்தது. அவரால் பெரிய சிக்ஸ் அடித்த முடியும் என்றாலும், அவர் களத்துக்கு வந்தவுடன் சில பந்துகளில் ஆட்டமிழந்து விடுவார். அவர் ஷார்ட் பந்துகளில் மட்டும் தான் அவுட் ஆகிறார் என்பதை உணர்ந்த தோனி, ஷார்ட் பந்துகளில் பவுண்டரி அடிக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுரை கூறி இருக்கிறார். அந்த ஒரு விஷயத்தால் துபேவின் பேட்டிங் பெரிய அளவில் மாறியது. மேலும், அவர் செய்யும் சிறு, சிறு தவறுகள் குறித்து போட்டி முடிந்தவுடன் அவரிடம் அமர்ந்து பேசி இருக்கிறார்.
அதன் காரணமாக, சிவம் துபே 2023 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கினார். பல போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதை அடுத்து இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இரண்டு சிறந்த இன்னிங்க்ஸ் ஆடி தன்னை நிரூபித்து இருக்கிறார். மேலும், பந்துவீச்சிலும் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார். அவர் பந்துவீச்சை மட்டும் மெருகேற்றினால் போதும் என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வருவார் என கூறப்பட்ட சிவம் துபே, தற்போது தோனி சொன்ன ஒரு அறிவுரையால் இந்திய அணியில் இடம் பெறும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். ஆப்கானிஸ்தான் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போது சிவம் துபே மறக்காமல் தோனி பெயரை குறிப்பிட்டார். ஆக, தோனி ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக ஒரு வீரரை வளர்க்க காரணமாக இருந்துள்ளார்.