வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். இந்தத் தொடரில் இந்திய அணியில் அனுபவம் இல்லாத வேகப் பந்துவீச்சாளர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அணியில் இருந்த முகமது சிராஜிம் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகிச் சென்றார். இதனால் முகேஷ் குமார், உம்ரான் மாலிக் சர்துல் தாகூர் போன்ற வீரர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இளம் வீரர்கள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. காரணம் இந்திய அணி குறைந்த இலக்கையே நிர்ணயித்திருந்தது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடிதான் ஏற்பட்டது.
ஆனால் இன்றைய ஆட்டத்தில் கதையே வேறு மாதிரி இருந்ததால் இந்திய அணி வீரர்கள் பந்து வீச்சிலும் பட்டாசை கொளுத்தினர். குறிப்பாக தனது முதல் ஒருநாள் தொடரில் களமிறங்கி உள்ள ஐபிஎல் வீரர் முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணி வீரர்கள் சிக்ஸர்,பௌண்டரி என அடித்த அதே ஆடுகளத்தில் முகேஷ் குமார் வீசியபோது பந்தை தொடவே முடியவில்லை.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர்.வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ரன் குவிப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முகேஷ் குமார் சர்ப்ரைஸ் கொடுத்தார். தன்னுடைய ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நிலைகுலைய வைத்தார். அந்த அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் டக் அவுட் ஆகியும் மெயர்ஸ் 4 ரன்களில் போல்ட் ஆகியும் கேப்டன் சாய் ஹோப் 5 ரன்களிலும் முகேஷ் குமாரின் பந்து வீச்சில் வெளியேறினர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள்ளே ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் முகேஷ் குமார் 5 ஓவர்களை வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய முதல் ஸ்பெல்லிலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை முகேஷ் குமார் நிலை குலைய வைத்தார். இதனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நல்ல வேகப்பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.