ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் முகேஷ் குமார், சர்வதேச கிரிக்கெட்டில் தனது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடாடில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகம் செய்யப்பட்டார். இதன் பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்களும், ரோகித் சர்மா 80 ரன்களும் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச் மற்றும் வாரிக்கன் தலா3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட் - தேஜ்நரைன் சந்தர்பால் பேட்டிங் ஆடினார். மிகவும் நிதானமாக விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் மிதவேகத்தில் உயர்ந்தது. இதன்பின் ஜடேஜா வீசிய பந்தில் தேஜ்நரைன் சந்தர்பால் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் மெக்கன்சி - பிராத்வெயிட் இணை சேர்ந்து விக்கெட் கொடுக்காமல் ஆடியது. இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை பிராத்வெயிட் - மெக்கன்சி கூட்டணி தொடங்கியது. இருவருமே புஜாராவை போல் மிகவும் நிதானமாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் சிராஜ், உனாத்கட், அஸ்வின், ஜடேஜா என்று யார் வீசியும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் ரோகித் சர்மா பந்தை முகேஷ் குமாரிடம் கொடுத்தார்.

மெக்கன்சி -ன் பிராட்வெயிட் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை நெருங்கிய நிலையில், முகேஷ் குமார் வீசிய பந்தில் மெக்கன்சி 32 ரன்களில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி நீண்ட நேரமாக காத்திருந்த பிரேக் த்ரோ கிடைத்துள்ளது. இதன்பின் மழை பெய்ய தொடங்க, உணவு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ளது.