IPL: அத்துமீறிய மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்.. அம்பயருக்கு திட்டு.. சாட்டையை எடுத்த பிசிசிஐ
தரம்சாலா: மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட்-க்கு பிசிசிஐ தண்டனை அளித்துள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 201 ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி ஓவர் வரை போராடி மும்பை அணி அசத்தலாக எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஒருபுறம் உற்சாகமாக கொண்டாடி வர, மறுபுறம் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் செய்த தவறுக்காக பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 200 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய போது போட்டியின் 19வது ஓவரில் மைதானத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் அதிரடி வீரருமான கீரன் பொல்லார்ட், அங்கு பணியில் இருந்த 4வது நடுவரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐபிஎல் நடத்தை விதிமுறை 2.3ன் படி களத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது முதல் நிலை குற்றமாகும். நடுவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்திற்காக பொல்லார்ட்டுக்கு அவரின் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக பிசிசிஐ விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது ஒழுங்குமுறை கணக்கில் 1 குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் பங்கஜ் தர்மானி விதித்த இந்த அதிரடி தண்டனையை பொல்லார்ட்டும் எந்தவித மறுப்புமின்றி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
இந்தப் போட்டியில் மும்பை வீரர் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் ஆடி கடைசி வரை நின்றார். அவர் எடுத்த 75 ரன்கள் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மறுபுறம், ஆரம்பத்தில் தொடர்ந்து 7 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கெத்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான 5வது தோல்வியாகும்.
மற்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்பை கெடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால் பஞ்சாப் கிங்ஸ் அணி இனி வரும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் தவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications

