
2வது டெஸ்ட் போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எப்படியாவது ரன் வேட்டை நடத்திவிட வேண்டும் என ஆர்வத்துடன் தென்னாப்பிரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைத்தார் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்.

அட்டகாச செயல்பாடு
தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்களான தியுனிஸ் டி ப்ருயுன் (12), வெர்ரேய்ன் (52), மார்கோ யான்சன் (59), ரபாடா (4), லுங்கி இங்கிடி (2) ஆகியோர் அடுத்தடுத்து கேமரூன் கிரீனின் வேகத்தில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 189 ரன்களுக்கெல்லாம் அந்த அணி ஆல் அவுட்டானது. சிறப்பாக செயல்பட்ட கிரீன் 10.4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

ரசிகர்கள் உற்சாகம்
அவரின் இந்த ஆட்டத்தால் ஆஸ்திரேலிய ரசிகர்களை விட, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தின் போது கேமரூன் கிரீனை ரூ. 17.5 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது. இவர் பொல்லார்டுக்கு மாற்று வீரராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு குழப்பம் இருந்தது.

என்ன குழப்பம்
கடந்தாண்டு மெகா ஏலத்தின் போது இளம் வீரர் இஷான் கிஷானை ரூ. 15.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியது. ஆனால் அவர் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தார். எனவே இந்த முறை கிரீனும் ஏமாற்றிவிடுவாரா என்ற குழப்பம் இருந்தது. அதனை தற்போது பொய்யாக்கியுள்ளார் க்ரீன். இவர் ஐபிஎல்-ல் விளையாடுவதை எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications