மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இது அதிக நட்சத்திர வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தக்க வைக்கப்படும் போது அதிக சம்பளம் அளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைக்கவோ அல்லது ஆர்டிஎம் (Right To Match - RTM) அட்டையை பயன்படுத்தி ஏலத்திலோ வாங்கிக் கொள்ள முடியும். அக்டோபர் 31ம் தேதிக்குள் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்ற விவரத்தை அளிக்க வேண்டும் என பிசிசிஐ கூறி உள்ளது.

இந்த நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் கடந்த சில தினங்களாக அது குறித்த விவாதத்தில் ஈடுபட்டு உள்ளன. முன்னணி ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள்? என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அணியை விட்டு விலகுவார் என்ற பேச்சு ஒரு பக்கம் உள்ளது.
அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி அளிக்கப்படுமா? அவர் தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படும்? என்பதிலும் குழப்பம் உள்ளது. இந்த ஆண்டு தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்க வேண்டும் என்பதையும் பிசிசிஐ சுட்டிக் காட்டி உள்ளது. அதன்படி ஆறு வீரர்களை தக்க வைக்க ஒரு அணி முடிவு செய்தால் அதில் குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் வீரர் இடம் பெற வேண்டும். அவருக்கு அதிகபட்சமாக 4 கோடி சம்பளம் அளிக்க வேண்டும்.
தக்க வைக்கப்படும் மற்ற ஐந்து சர்வதேச வீரர்களுக்கு முறையே 18 கோடி, 14 கோடி, 11 கோடி, 18 கோடி மற்றும் 14 கோடி அளிக்க வேண்டும். அதாவது ஒரு அணி நான்காவதாக மற்றும் ஐந்தாவதாக இரு வீரர்களை தக்க வைக்க விரும்பினால் கூடுதல் சம்பளத்தை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு 18 கோடி சம்பளம் அளிக்கப்படுமா? என்பதே சந்தேகமாக உள்ளது.
இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணி மற்றும் ஐபிஎல் பயிற்சியாளர் டாம் மூடி பேசி இருக்கிறார். "கடந்த ஐபிஎல் தொடரில் நடந்ததை வைத்து பார்க்கும் போது ரோஹித் சர்மா அந்த அணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவுக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு 14 கோடி சம்பளம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது."
"ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு ஃபார்ம் மற்றும் உடற் தகுதியை வைத்து அவரது சம்பளம் முடிவு செய்யப்படும். ஹர்திக் பாண்டியா நிச்சயம் 18 கோடி வீரராக இருக்க தகுதியானவரா? அவருக்கு 18 கோடி அளிக்க வேண்டும் என்றால் அவர் போட்டிகளை வென்று கொடுக்கும் வீரராக இருக்க வேண்டும். அதை அடிக்கடி செய்ய வேண்டும். கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் அதிக சிரமங்களை எதிர்கொண்டாலும் மேலும் அந்த அணியில் திலக் வர்மாவும் இருக்கிறார்."
"கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் தடுமாறி வருகிறது. தங்கள் அணியை சேர்ந்த வீரர்களை தக்க வைக்கவும், ஏலத்தில் வாங்கவும் அவர்கள் அதிக பணத்தை செலவிட்டு இருக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் இஷாந்த் கிஷன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர். அவர்கள் இருவருக்கும் மிக அதிக சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதற்கு உரிய மதிப்பை திருப்பி அளித்து இருக்கிறார்களா?"
"இஷான் கிஷனை பார்த்த போது, அவர் மிகவும் அற்புதமான வீரராக இருந்தார். ஆனால், அவர் வெப்பமும் குளிரும் போல (சில போட்டிகளில் மட்டும்) ரன் சேர்க்கிறார். அவர் எத்தனை போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் ஆடி வெற்றி தேடிக் கொடுத்து இருக்கிறார்? அந்த கேள்வியை நான் நிச்சயம் கேட்க வேண்டும். அவரை தக்க வைக்க 14 கோடி ரூபாய் சம்பளம் அளித்தால் அவர் அதற்குரிய செயல்பாட்டை அளிப்பாரா? என்று கேட்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்." என்றார் டாம் மூடி.