டெல்லி அணியின் ஸ்டார் வீரருக்கு குறி வைக்கும் மும்பை.. சோகத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ்..
சென்னை: சூர்யகுமார் யாதவை வெளியேற்றிவிட்டு, இந்திய அணியின் இளம் புயல் ஒருவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணி மும்முரம் காட்டி வருகிறது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் 4 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள்ளாக அனைத்து அணிகளும் வழங்கப்பட்டாக வேண்டும்.

மும்பை அணி அதிரடி
அந்தவகையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் ரோகித் சர்மா தக்கவைக்கப்படவுள்ளார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷான், கெயீரன் பொல்லார்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தக்கவைக்கப்படவுள்ளனர்.

ஏமாந்த வீரர்
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யாவை கழட்டிவிட அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனைவிட முக்கியமாக
மிடில் ஆர்டரில் தூண் போன்று நிலைத்து நின்று ஆடும், சூர்யகுமாரை கழட்டிவிட அந்த அணி நிர்வாகம் முடிவு செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. அவருக்கு மாற்றாக தான் இஷானை தக்கவைத்துள்ளது.

மும்பை அணி திட்டம்
இந்நிலையில் ஏலத்தில் கூட சூர்யகுமாரை எடுக்க மும்பை அணி தயாராக இல்லை எனத்தெரிகிறது. ஏனென்றால் அவரின் இடத்திற்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவரின் கேப்டன்சி பதவி தற்போது பண்ட்-க்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் இருந்து வெளியேறுகிறார்.

அடுத்த கேப்டன்?
எனவே ஏலத்திற்கு வரும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கிவிட்டால், மும்பை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்பாக அமையும். ஏனென்றால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் பொல்லார்ட் இருவருமே ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருகின்றனர். எனவே அவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் வழிநடத்தவைக்கலாம்.


Click it and Unblock the Notifications