“ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
ராய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு சுக்குநூறாக உடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தத் தோல்விக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இளம் வீரர் ராஜ் பாவா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரொமாரியோ ஷெப்பர்ட் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு வெற்றியை உறுதி செய்வது போல தெரிந்தது. ஆனால், 4வது பந்தில் புவனேஸ்வர் குமார் அடித்த அந்த ஒரு சிக்சர் மும்பையின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. இறுதியில் கடைசி பந்தில் பெங்களூரு த்ரில்லர் வெற்றி பெற்றது.
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஆடாததால், தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் இந்த தோல்வியால் நிலைகுலைந்து போனார். போட்டிக்கு பின் பேசிய அவர், "இப்படி ஒரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு கசப்பான உண்மை. நாங்கள் எப்போதும் வெற்றியையே பார்த்த அணி, இப்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தாங்க முடியாத வழியாக உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் பலமாக மீண்டு வருவோம்" என கலங்கியபடி தெரிவித்தார்.
இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளைச் சந்தித்துள்ளது. தொடக்கத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியுடன் சீசனைத் தொடங்கினாலும், அதன் பிறகு அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் அதலபாதாளத்திற்குச் சென்றது. திலக் வர்மாவின் அதிரடி சதம் குஜராத் அணிக்கு எதிராக ஒரு வெற்றியைத் தேடித்தந்தாலும், மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணியால் மீண்டெழ முடியவில்லை.
கடந்த 2020ம் ஆண்டு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற பிறகு, மும்பை அணியின் கிரிக்கெட் பயணம் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி, இப்போது 2026லும் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விக்கெட் எடுக்கத் திணறியதும், முக்கிய பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட் ஆனதும் இந்த மாபெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. சாம்பியன் அணியின் இந்த பரிதாப நிலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications