மும்பை: 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை மும்பை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பை வென்று கொடுத்து இருந்தார் சூர்யகுமார் யாதவ். எனவே, அவரையே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.
இதுபற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவதே மிகச் சரியான முடிவாக இருக்கும். நிச்சயமாக அவருக்குத்தான் கேப்டன் பதவியை வழங்க வேண்டும். அது இன்னும் நடக்காதது எனக்கு சற்று கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதை சுட்டிக்காட்டியே அஸ்வின் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதேநேரத்தில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி திறமை குறித்தும் அஸ்வின் விரிவாக பேசினார். "குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா. 2வது சீசனில் அணியை இறுதிப்போட்டி வரை சிறப்பாக வழிநடத்தினார். அவர் மும்பை அணிக்கு திரும்பிய போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் கேப்டனாக செயல்பட்ட முதல் ஆண்டு முழுவதும் ரோஹித் சர்மா தொடர்பான சர்ச்சைகளை சமாளிப்பதிலேயே வீணாகிவிட்டது" என்று அஸ்வின் கூறினார்.
மேலும், "இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ் அணியில் விளையாடும் போது, ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இது அவருக்கு பல மன அழுத்தங்களை கொடுக்கலாம். இருப்பினும், வெளிப்புற அழுத்தங்கள் ஏதும் இல்லாமல், அணி நிர்வாகம் மற்றும் வீரர்களின் முழுமையான ஆதரவு கிடைத்தால் ஹர்திக் பாண்டியாவால் மீண்டும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும்" என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை நியமித்த போது மும்பை அணி நிர்வாகம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த பரபரப்பான சூழலில், 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வரும் மார்ச் 29 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
