மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான வில் ஜாக்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தங்களது விக்கெட்களைச் சரியாக பயன்படுத்தவில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் பேட்டிங்கில் நிறைய முன்னேற வேண்டும் எனவும், அந்த அணியின் ஃபீல்டிங்கும் சரியில்லை என ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். பேட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி பலவீனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் 23 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் அளித்தார். ரோகித் சர்மா 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சூரியகுமார் யாதவ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய வில் ஜாக்ஸ் சற்று நிதானமாக விளையாடினாலும் அவர் அதிக ரன்கள் சேர்க்கத் தவறிவிட்டார். 26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் கம்மின்ஸ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார் பாண்டியா. ஆனால், வெற்றிக்கு ஒரு ரன் தேவை எனும் நிலையில் ஹர்திக் பாண்டியா தேவையில்லாமல் பெரிய ஷாட்டை ஆட முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பிறகு வந்த நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரு ரன் தேவை எனும் நிலையில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு திலக் வர்மா ஒரு பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "மும்பை அணி இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம். நன்றாக விளையாடி வந்த வில் ஜாக்ஸ் தனது விக்கெட்டை பொறுப்பில்லாமல் பறிகொடுத்தார். ஹர்திக் பாண்டியா போட்டியை முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பெரிய ஷாட் அடிக்க நினைத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மும்பை அணிக்கு பேட்டிங் சரியாக வரவில்லை. அவர்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டும்."
மும்பை அணியின் ஃபீல்டிங்கும் மிக மோசமாக உள்ளது. மும்பை அணியின் ஃபீல்டர்கள் சில கேட்ச்களை கோட்டை விட்டுள்ளனர். மேலும், இறுதி ஓவர்களில் பந்துவீச்சும் சரியாக இல்லை. அவர்கள் இந்த இரண்டு இடங்களிலும் நிறைய முன்னேற வேண்டும்," என்று ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பைப் பற்றி சிந்திக்க முடியும்.