
கொல்கத்தா: தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது மீண்டும் 2015 ஐபிஎல் போட்டியை நினைவுபடுத்துகிறது மும்பை அணி.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதலில் ஆடிய ஆட்டங்களில் சொதப்பலாக விளையாடியது.

சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஒரு விக்கெட்டில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்து ஹைதராபாத், டெல்லி அணிகளிடம் தோல்வியடைந்தது. தனது நான்காவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை வென்றது.
ஐந்தாவது ஆட்டத்தில் ராஜஸ்தான், 6வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியடைந்தது. 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றது. ஏழாவது ஆட்டத்தில் சிஎஸ்கேவை வென்ற மும்பை அணி, அதற்கடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்தது. 8ல் 2ல் மட்டுமே வென்று பரிதாப நிலையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
அதற்கடுத்து பஞ்சாப், கொல்கத்தா அணிகளை வென்று, 10 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 6ல் தோல்வியுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை மீண்டும் வென்று, 10 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது.
கடந்த 2015லும் இதேபோன்ற நிலையில் தான் மும்பை இருந்தது. மொத்தம் விளையாடிய 14 ஆட்டங்களில் 8ல் வெற்றி, 6ல் தோல்வியுடன் 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றியுடன் இருந்த மும்பை, கடைசியில் 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்றது.
முதல் குவாலிபையரில் சிஎஸ்கேவை வென்று பைனல்ஸ் சென்றது. அதிலும் சிஎஸ்கேவை வென்று கோப்பையை வென்றது. 2015ல் நடந்ததைப் போலவே, தற்போதும் கடைசி இடத்தில் இருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மும்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது.