மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, மும்பை இந்தியன்ஸ் அணியைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இதுநாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரராக அந்த அணிக்கு தீவிரமாக முரட்டு முட்டு கொடுத்து வந்த அம்பத்தி ராயுடு தற்போது தனது மற்றொரு முன்னாள் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புகழ் மாலை பாடத் துவங்கி இருக்கிறார். மற்ற அணிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவே விரும்பாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் பல போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்து வந்தது. அந்த அணியில் மூத்த வீரரான ரோகித் சர்மா துவக்கத்தில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பும்ரா முதல் ஐந்து போட்டிகளில் விளையாடவில்லை. சூரியகுமார் யாதவும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே அதிரடி ஆட்டத்தை ஆடியிருந்தார்.
ஆனால் தற்போது நிலைமை மாறி உள்ளது. ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்து உள்ளார். சூரியகுமார் யாதவும் தனது முந்தைய அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பி இருக்கிறார். தீபக் சாகர் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் பவர் பிளேயில் தங்களது வேகப்பந்து வீச்சின் மூலம் எதிரணிகளை அச்சுறுத்தி வருகின்றனர். இப்படி அனைத்தும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக மாறி இருக்கிறது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.
இதையடுத்து, அந்த அணி பற்றிப் பேசிய அம்பத்தி ராயுடு, "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய போட்டிகளிலும், அழுத்தமான சூழ்நிலைகளிலும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும். பிளே ஆஃப் சுற்றில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அணிக்கு எதிராக எந்த அணியும் விளையாட விரும்பாது. மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் இல் மிகவும் சக்திவாய்ந்த அணியாக இருக்கும்." என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் தற்போது தங்களின் வேலையை அறிந்து சரியாக செயல்படுகிறார்கள். ரோகித் சர்மாவின் ஆட்டம் மீண்டும் வந்துவிட்டது. அவர் தனது ஷாட்களை எளிதாக ஆடுகிறார். அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ஃபுல் ஷாட் அற்புதமாக இருந்தது. அவர் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் விழித்துக் கொண்டிருக்கிறார். இனி அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று அம்பத்தி ராயுடு பேசியிருக்கிறார்.