ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜடேஜா மட்டும்தான் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் இடது கை பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனால் இடது கை பேட்ஸ்மேனுக்கான ஆடிசனாக ஐபிஎல் தொடர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்தியாவில் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தற்போது அந்த இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் திலக் வர்மா நல்ல தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய திறமைக்கு கடந்த சீசன் வெறும் டிரைலராக இருந்த நிலையில், திலக் வர்மா தற்போது நடைபெறும் ஐபிஎல் சீசனில் பட்டையை கிளப்புகிறார்.
நடப்பு சீசனில் ஆர் சி பி அணிக்கு எதிராக 46 பந்துகளில் 84 ரன்கள் அடித்த திலக் வர்மா சிஎஸ்கேவுக்கு எதிராக 18 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதைப் போன்று டெல்லி அணிக்கு எதிராக முக்கிய கட்டத்தில் 29 பந்துகளில் 41 ரன்களை விளாசிய திலக் வர்மா கேகேஆர் அணிக்கு எதிராக 25 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் சேர்த்தார்.

அதேபோன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 37 ரன்களை விளாசினார். இதனால் திலக் வர்மா விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோஹித் சர்மா, திலக் வர்மா ஆட்டத்தை அணுகும் முறை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.மேலும் திலக் வர்மாவை மற்ற அணிகளிலும் நாம் சீக்கிரம் பார்க்கலாம் என்று கூறி சிரித்தார்.
இந்த நிலையில் தனது வெற்றி குறித்து பேசிய திலக் வர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி தமக்கு ஆதரவு அளித்து உதவுவதாக கூறினார். தாம் இளம் வீரர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் மதிப்பதாகவும் சச்சின், ரோஹித் ஆகியோர் தமக்கு முக்கிய அறிவுரை வழங்குவது தனது பேட்டிங்கிற்கு மிகவும் உதவியதாக திலக் வர்மா கூறியுள்ளார்.