மும்பை: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 3 வீரர்களை டிரேட் மூலமாக வாங்கி இருக்கிறது. ஏற்கனவே ஷர்துல் தாக்கூர் மற்றும் ஷர்ஃபானே ரூதர்ஃபோர்டு ஆகியோரை டிரேட் மூலமாக வாங்கியுள்ள மும்பை அணி, தற்போது கேகேஆர் அணியின் ஸ்பின்னரான மயங்க் மார்க்கண்டேவை வாங்கி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், குவாலிஃபையர் 2வது போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, வில் ஜாக்ஸ், நமன் திர், ரிக்கல்டன், போல்ட் உள்ளிட்ட பலமான வீரர்கள் இருந்தும், மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதற்கு தரமான ஸ்பின்னர் ஒருவர் இல்லாததும் காரணமாக அமைந்தது. கடந்த சீசனில் விக்னேஷ் புத்தூர், கரண் சர்மா மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய இருவரையும் நம்பியே களமிறங்கியது. வில் ஜாக்ஸ் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக செயல்பட்டாலும், கரண் சர்மா கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதனால் ஏற்கனவே மும்பை அணிக்காக ஆடிய ராகுல் சஹரை டிரேட் மூலமாக வாங்க மும்பை அணி முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஒப்புக் கொள்ளவில்லை. இதன்பின் வேறு ஸ்பின்னர் வாய்ப்புகளை மும்பை அணி ஆய்வு செய்தது. அப்போது கேகேஆர் அணியில் நீண்ட காலமாகவே மயங்க் மார்க்கண்டே பெஞ்சில் இருக்கிறார்.
இதனால் கேகேஆர் அணியை மும்பை அணி நாடிய போது, அதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மயங்க் மார்க்கண்டேவை ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கி இருக்கிறது. ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து ஷர்துல் தாக்கூரையும், குஜராத் அணியில் இருந்து ரூதர்ஃபோர்டையும் மும்பை அணி வாங்கி இருந்தது.
தற்போது டிரேட் மூலமாக வாங்கப்பட்ட 3வது வீரராக மயங்க் மார்க்கண்டே அமைந்திருக்கிறார். இதன் மூலமாக மும்பை அணியில் ஸ்பின்னருக்கான பிரச்சனைகள் முடிவடைந்திருக்கிறது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே மும்பை அணி தங்களுக்கு தேவையான வீரர்களை டிரேட் மூலம் வாங்கி அணியின் தேவையை பூர்த்தி செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.