சிஎஸ்கே இதை செய்யாமல் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தராது.. அஸ்வின் சொன்ன லாஜிக்
மும்பை: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்த டிரேட் ஒப்பந்தம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், இது அவ்வளவு எளிதில் முடியாது என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய அஸ்வின், "ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு 3டி ஆல்ரவுண்டரை அனைத்து அணிகளும் பெற விரும்பும். ஆனால், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தங்களின் நேரடி போட்டியாளர்களான 5 முறை சாம்பியன் சிஎஸ்கே அல்லது 3 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு அவரை விட்டுத்தருமா? தனது அணியைப் பலப்படுத்தாமல் அல்லது சமமான வீரர்களைப் பெறாமல் மும்பை அணி இந்த டிரேடை செய்யவே செய்யாது" என்று கூறியுள்ளார்.

மேலும் டிரேட் வாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், "சிஎஸ்கே அணி சிவம் துபே மற்றும் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரை வழங்கி ஹர்திக் பாண்டியாவை வாங்க முயல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங்கை வழங்கினால் மட்டுமே மும்பை அணிக்கு அது சாதகமான டிரேடாக அமையும். சிஎஸ்கே அணி சிவம் துபேவை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவர் மும்பை சென்றால் இன்னும் அதிரடியாக விளையாடுவார். அதேவேளையில் ஒரு வீரர் தான் குறிப்பிட்ட அணிக்குத்தான் செல்வேன் என கட்டாயப்படுத்த முடியாது" என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2024 சீசனில் ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு, தலைமைப் பொறுப்பும் செயல்பாடும் பெரும் சவாலாக அமைந்தது. குறிப்பாக 2026 ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 206 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் அணி நிர்வாகத்துடன் ஹர்திக் பாண்டியா சுமூகமான உறவில் இல்லை என்பதாலேயே அவர் வேறு அணிக்கு மாற உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications

