டெல்லி: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர டி20 வீரர் சூர்யகுமார் யாதவ் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 டி20 வீரர் சூர்யகுமார் யாதவ் தான். ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் வெளுத்து வாங்கி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் சாதாரணமாக அரைசதம், சதம் விளாசும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு அரைசதம் அடிக்க திக்குமுக்காடி வருகிறார்.

இதுவரை 26 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கும் சூர்யகுமார் யாதவால், 526 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்திருக்கிறது. அதிலும் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமாரின் பேட்டிங் சராசரி 14.11ஆக மட்டுமே உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கடினம் என்று பார்க்கப்பட்டு வந்தது.
ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டால், முதல் ஆளாக சூர்யகுமார் யாதவ் தான் வெளியேற்றப்படுவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், புதிய வீரர் திலக் வர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டும் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார். 17 பேர் கொண்ட அணி என்றாலும், சூர்யகுமார் யாதவ் இடத்தில் ஒரு விரிஸ்ட் ஸ்பின்னர் தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

சுஞ்சு சாம்சனை மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டதற்கு விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் அணுகூலம் உள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்தது ஏன் என்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவை ஃபினிஷர் ரோலில் களமிறக்க ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் ஆலோசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஃபினிஷர் ரோலில் விளையாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் பவுலிங் பக்கமே சென்றிடாத சூர்யகுமார் யாதவை எப்படி ஃபினிஷர் ரோலில் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னால் மும்பை லாபியே இருப்பதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாஹலை நைசாக ஒதுக்கிவிட்டு, அந்த இடத்தில் பேட்ஸ்மேனை கொண்டு வந்திருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று விவாதித்து வருகின்றனர்.