நாளை முதல் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் நாளை முதல் கோலாகலமாக துவங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையிலும் அடுத்த போட்டி மும்பையிலும் நடைபெறவுள்ளன. மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது நிகழ்ச்சிகளுக்கு தடை
இந்நிலையில் மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதையடுத்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை மறுதினம் போட்டி
இந்நிலையில் நாளை மறுதினம் முதல் மும்பை வான்கடே மைதானத்தில் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மைதானத்தின் அருகில் வசிப்பவர்கள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் மைதானத்தின் வெளியில் அதிகமாக கூடுவார்கள் என்றும் அதை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் சூழல்
இதையடுத்து கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் வான்கடே மைதானத்தின் அருகில் அதிகமான குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் காணப்படுவதால் போட்டிகளை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு மாற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறையானதல்ல என கருத்து
இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துவிட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது முறையானதல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.