
4வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் 4வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணியுமே தங்களது அணியில் புதிய வீரர்களை சேர்த்து அணியை பலப்படுத்தியுள்ளன.

சிறப்பான வான்கடே மைதானம்
மேலும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக வான்கடே மைதானம் உள்ளது. இந்த மைதானம் மிகவும் சிறியதாக இருப்பதும் அங்கு அதிக ரன்களை பேட்ஸ்மேன்கள் குவிக்க முக்கிய காரணமாக உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே -டெல்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டியிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பீல்டிங் தேர்வு
இந்நிலையில் இன்றைய போட்டியிலும் ஆர்ஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அதிக ரன்களை அடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது இரு அணிகளுக்கிடையில் டாஸ் போடப்பட்டு, ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

74 ஐபிஎல் போட்டிகள்
வான்கடே மைதானத்தில் இதுவரை 74 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் ஆடிய அணிகள் 36 போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 38 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகமாக இந்த மைதானத்தில் 235 ரன்களை ஒரு விக்கெட் இழப்பிற்கு கடந்த 2015ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எடுத்துள்ளது.

மழைக்கு வாய்ப்பில்லை
இந்நிலையில் அங்கு வானிலை சிறப்பாக உள்ளதாகவும் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மழை பெய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இந்த பிட்சில் இதுவரை விளையாடியதில்லை. இதுவே இரு அணிகளும் இந்த மைதானத்தில் ஆடும் முதல் போட்டி.


Click it and Unblock the Notifications