டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடனான உறவு எப்போதும் ஒன்றுதான் எனவும், அவர்களுடனான மோதல் களத்தில் மட்டுமே இருக்கும் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரின் உச்சக்கட்ட ஹைலைட் விராட் கோலி - கவுதம் கம்பீர் இருவரும் நேரடியாக களத்தில் மோதிக் கொண்டதுதான். பெங்களூரு மைதானத்தில் வைத்து கவுதம் கம்பீர் வம்பிழுக்க, லக்னோ மைதானத்தில் வைத்து விராட் கோலி தனியாளாக ஆர்ப்பரிக்க, ஏகானா மைதானத்தில் இருவருமே மோதிக் கொண்டனர். இவர்களின் மோதல், அத்துடன் நிற்காமல் சமூக வலைதளங்களிலும் பிரதிபலிக்க தொடங்கியது.

ஒருபக்கம் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் விமர்சிக்க, இன்னொரு பக்கம் நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாட என்று சமூக வலைதளத்தையே போர்க்களமாக்கினர். ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின் கவுதம் கம்பீர் பங்கேற்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் விராட் கோலியின் சாதனைகளையும், அவரின் பேட்டிங் டெக்னிக்கையும் பாராட்டியே பேசி வந்தார். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதுகுறித்த விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அப்போது எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடனான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்குள் ஏதேனும் விவாதமோ, கருத்து வேறுபாடோ எழுந்தால், அது களத்தில் மட்டுமே பிரதிபலிக்கும். எங்களுக்கு இடையிலான மோதல், களத்திற்கு வெளியில் செல்லாது.
ஏனென்றால் இது எங்களுக்கு இடையிலான தனிப்பட்ட மோதல் அல்ல. எந்த அளவிற்கு என் அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதே அளவிற்கு அவர்களும் அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்திய அணிக்காக விராட் கோலி செய்துள்ள பங்களிப்புக்காக அவர் மீது அதிக மரியாதை உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏன் தோனியை மட்டுமே தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தோனிக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவருக்காக நிற்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று கவுதம் கம்பீர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.