லண்டன்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் தெலுங்கு கற்றுக் கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வினின் யூ டியூப் வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி நிச்சயம் ஐசிசி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஓவல் ஆடுகளத்தை தயாரித்து வரும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய வீரர்களின் போட்டோஷூட் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இஷான் கிஷன், கேஎஸ் பரத் ஆகியோரும் அஸ்வினின் வீடியோவில் உள்ளனர்.
அதேபோல் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கேஎஸ் பரத்திடம் அஸ்வின் தெலுங்கு கற்றுக் கொண்டு சில தெலுங்கு வார்த்தைகளையும் பேசியுள்ளார். இதனிடையே லண்டன் ஓவலில் சம்மர் சீசன் தொடங்கியுள்ள நிலையில், 5 நாட்களும் போட்டி நடக்குமா என்ற கேள்விகல் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆடுகள தயாரிப்பாளர், 5 நாட்களும் ஆட்டம் நடக்கும். வெயில் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த வீடியோவில் அஸ்வின் பதில் அளித்துள்ளார். அதில், அண்மையில் நான் விளையாடிய தொடர்களில் மிகப்பெரிய போட்டி இதுதான். இதில் என் ரோல் என்ன என்றோ, எனது பங்களிப்பு என்ன என்பது பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் வெல்வதே என் ஆசை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஓவல் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கே சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி ஒரேயொரு ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது. ஆனால் வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் 4 மற்றும் 5 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை அதிகரிக்கும். இதனால் இந்திய அணி தரப்பில் அஸ்வின் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.