அடுத்த அஸ்வின் ரெடி
இதுவரை 10 போட்டிகளில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குவாலிபையர்-1 போட்டியில்தான் இவர் தனது முழு கோட்டாவான 4 ஓவர்களை வீச வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்திலிருந்து மற்றொரு ரவிச்சந்திரன் அஸ்வினாக வளர வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
சென்னைக்கும் வாஷிங்டன்னுக்கும் சம்மந்தம்?
வாஷிங்டன் என்ற பெயருக்கும், சென்னையில் பிறந்த சுந்தருக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி மட்டும் ரசிகர்களை துரத்திக் கொண்டே உள்ளது. அதற்கு விடையை சுந்தரின் தந்தையான எம்.சுந்தர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தந்தை பேட்டி
எம்.சுந்தரின் வார்த்தைகளில் இருந்து: சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். எனது சிறு வயதில் காட்பாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, பள்ளி கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வாஷிங்டன்தான்.
காட்பாதர் வாஷிங்டன்
மெரினா பீச்சில் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். வாஷிங்டன் தனது சைக்கிளில் என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்வார். கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். என்னையும் ஊக்கப்படுத்தியபடி இருந்தார். அவரால்தான் நான் படிக்கவும், சிறப்பாக விளையாடவும் முடிந்தது.
வாஷிங்டன் மறைந்த ஆண்டு, மகன் பிறந்தார்
1999ம் ஆண்டு, வாஷிங்டன் இறந்தார். அந்த ஆண்டுதான் எனது மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பேறுகாலத்தின்போது எனது மனைவி மிகவும் சிரமங்களை சந்தித்தார். கடவுள் அருளால் குழந்தையும், தாயும் நலமாகினர். இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன். ஆனால், பி.டி.வாஷிங்டன் மீதான அன்பால் பிறகு அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன். இப்படித்தான் வாஷிங்டன் சுந்தர் என எனது மகனுக்கு பெயர் கிடைத்தது. இவ்வாறு எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
மதிப்புக்குரிய பெயர்
வாஷிங்டன் சுந்தர் என்ற பெயரை பார்த்து, தனுஷ், விவேக் நடித்த திரைப்பட காமெடி காட்சி பல ரசிகர்களுக்கு நினைவு வந்தது. வாஷிங்டன் வெற்றிவேல் என புனைப்பெயர் சூட்டி நெட்டிசன்கள் குறும்பு செய்தனர். ஆனால் இந்த பெயரின் பின்னால் உள்ள நன்றி மறக்காத ஒரு தந்தையின், சென்டிமென்டான காரணம், ரசிகர்களை கண்டிப்பாக அந்த பெயரின் மதிப்பை கூட்டும் என்பது உண்மை.