சேலம்: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த மண்ணில் கட்டியுள்ள நடராஜன் கிரிக்கெட் மைதானம் வரும் ஜூன் 23ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக சில போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும், தமிழ்நாடு இளைஞர்களின் மனதில் கிரிக்கெட்டில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்தவர் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் தொடங்கிய இவரின் பயணம், சிட்னி வரை பரவியது என்றே சொல்லலாம். ஆஸ்திரேலிய அணியின் கோட்டையான காபா மைதானத்தில் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அதன்பின்னர் காயம் காரணமாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்த்து இளைஞர்கள் பலரும் கிரிக்கெட்டை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் கிராமப்புற இளைஞர்களுக்காக நடராஜன், கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
அங்கிருந்து சில வீரர்கள் டிஎன்பிஎல் உள்ளிட்ட தொடர்களிலும் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் தனது பெயரில் ஒரு சர்வதேச தரத்திலான மைதானத்தை கட்ட வேண்டும் என்பதே தனது கனவு என்று நடராஜன் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளிலும் நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் நடராஜன் கிரிக்கெட் ஸ்டேடியப் பணிகள் தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தான் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை வரும் ஜூன் 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் நிர்வாகிகள் பழனி, சிஎஸ்கே நிர்வாகி விஸ்வநாதன், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் மைதான திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.