பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை விளாசி தள்ளுவேன் என்று ஆஸ்திரேலியா அணியின் இளம் தொடக்க வீரர் நேதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார். அடிலெய்டு மைதானத்தில் பும்ராவை எதிர்த்து ஆடியது நம்பிக்கை அளிப்பதாக கூறியுள்ள அவர், அவரின் சிறந்த பந்துகளில் தான் ஆட்டமிழந்ததாக கூறி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இன்று பிரிஸ்பேன் வந்தடைந்த இந்திய அணி வீரர்கள், அடுத்தப் போட்டிக்கான பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த முறை காபா மைதானத்தில் இந்திய அணி வென்றிருப்பதால், ஆஸ்திரேலியா அணியும் இம்முறை சிறப்பாக தயாராகி வருகிறது.
இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் நேதன் மெக்ஸ்வீனி இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார். இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை பும்ராவின் வேகத்தில் மெக்ஸ்வீனி விக்கெட்டை பறிகொடுத்தார். இதுகுறித்து மெக்ஸ்வீனி பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்கத்திலேயே பும்ராவை போன்ற ஒரு பவுலரை எதிர்கொண்டுள்ளேன்.

இதற்கு மேல் கடினமான சூழல் அமையாது என்று கருதுகிறேன். அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் பும்ராவின் ஸ்பெல்லை எதிர்கொண்டதில் இருந்து அடுத்தப் போட்டியிலும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் பும்ராவை அதிகமாக எதிர்கொள்ளும் போது, அவருக்கு எதிரான எனது ஆட்டம் மேம்படும். பும்ரா ஒரு வித்தியாசமான பவுலர். சர்வதேச அளவில் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் நான் எதிர்கொண்ட பவுலர்களில் பும்ரா மிகவும் வித்தியாசமானவர். அவரின் ஆக்ஷன் மற்றும் ஆங்கிள் இரண்டிற்கும் தகவமைத்து கொள்வது தேவையாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவிடம் இருந்து 2 சிறந்த பந்துகளை எதிர்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்தேன். அதனால் எனது ஆட்டம் அதற்கு மேல் மோசமாக இருக்காது என்பதால், அடுத்த இன்னிங்ஸில் தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருந்தேன்.
பும்ராவுக்கு எதிராக எப்படி விளையாடலாம் என்று தயாராகுவதே சிறந்த உணர்வை அளிக்கிறது. அடுத்த போட்டியில் பும்ராவை எதிர்கொள்ளும் போது இன்னும் மேம்பட்ட வீரராக இருப்பேன் என்று நினைக்கிறேன். அதேபோல் அவருக்கு சில பதிலடியை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். எனது முதல்தர கிரிக்கெட் அறிமுகம் காபா மைதானத்தில் தான் அமைந்தது.
காபா மைதானத்தில் அதிகளவில் பந்துகளைல் விக்கெட் கீப்பருக்கு விட்டு விளையாட வேண்டும். அந்த அளவிற்கு பவுன்ஸ் இருக்கும். பொறுமையுடன் அதிக நேரம் பிட்சில் செலவிடும் போது, விரைவாக ரன்களை குவிக்க முடியும். அதேபோல் புதிய பந்தில் விக்கெட் கொடுக்காமல் தப்பிவிட்டால், பேட்டிங் செய்வதற்கு மிகச்சிறந்த மைதானமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.