டாமினிக்கா: வெஸ்ட் - இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் 5வது பந்துவீச்சாளராக யார் இருப்பார் என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. ஏனென்றால் டாமினிக்கா மைதானத்தில் கடைசியாக 2017ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடியது.

அதில் பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் 11 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதுமட்டுமல்லாமல் இந்த மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் நிச்சயம் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நிச்சயம் களமிறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களில் 3வது வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்க முடியாது என்பதால், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் மற்றும் உனாத்கட் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நவ்தீப் சைனியை பொறுத்தவரை நீண்ட ஸ்பெல்லை வேகத்தை குறைக்காமல் வீசும் திறன்பெற்றவர் என்றாலும், அவரிடம் துல்லியம் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மறுபக்கம் ரஞ்சி டிராபி கிரிக்கெட் ஜாம்பவானாக உனாத்கட் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். கடந்த முறை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போதும் சிறப்பாக செயல்பட்டார்.
அதேபோல் 3 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்ட முகேஷ் குமார், பழைய பந்தில் எப்படி செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5வது பவுலராக யாரை தேர்வு செய்வார் என்ற கேள்வி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.