மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க கூட்டணியை மாற்றாமல் சுப்மன் கில்லுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிச.10ல் தொடங்கவுள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணிக்கு திரும்பாததால், சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியை தொடரவுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளார்.

இதனால் பிசிசிஐ தரப்பில் மீண்டும் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 அணியில் இருந்து பிரசித் கிருஷ்ணா, துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, தீபக் சஹர் மற்றும் சுப்மன் கில் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் திரும்பியுள்ளதால், இந்திய அணியின் தொடக்க கூட்டணி என்ன என்ற குழப்பம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 223 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். அதேபோல் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் அதிரடி தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மாற்ற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இடம் சுப்மன் கில்லுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசுகையில், சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கி நிரூபித்துள்ளதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை தொடக்க கூட்டணியான ருதுராஜ் கெய்க்வாட் - ஜெய்ஸ்வால் கூட்டணியை மாற்ற கூடாது. அதற்கு பதிலாக சுப்மன் கில்லை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதன்பின் 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவை களமிறக்குவேன். அதன்பின் 5,6,7 ஆகிய வரிசையில் களமிறங்க ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரை பொறுத்த முடியாது. ஆனால் ஒருவேளை சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் வந்தால், இந்திய தேர்வுக் குழுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.