மீண்டும் வந்தார் நெஹ்ரா
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி- டுவென்டி போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஏற்கனவே பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இவரது வருகை இந்திய அணிக்கு மேலும் வலுவை சேர்க்கும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது. பெரும் போராட்டத்துக்குப் பின் இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
நெஹ்ரா மீது சேவாக் நம்பிக்கை
நெஹ்ராவின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக், அணியில் மீண்டும் நெஹ்ரா சேர்க்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எந்தவகையிலும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சச்சினால் அணியில் 40 வயது வரை சிறப்பாக விளையாட முடிந்த போது கண்டிப்பாக நெஹ்ராவும் அணியில் சிறப்பாக விளையாடுவார்" என்று கூறினார். மேலும் அவர் "பல கேப்டன்களின் தலைமையில் நெஹ்ரா விளையாடி இருக்கிறார் , அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவும் ' என்றும் கூறினார்.
ஷேவாக் விளாசல்
நெஹ்ரா தேர்வு குறித்து கருத்து தெரிவித்தது போலவே பலமுறை முன்னாள் வீரர்களுக்கு சாதகமாக இவர் கருத்து கூறியிருக்கிறார். இதற்கு முன்பாக முன்னணி வீரர்களின் சேர்க்கை குறித்துக் கருத்து தெரிவித்திருந்த ஷேவாக் " அணியில் முன்னணி வீரர்கள் அதிகம் ஓரம் கட்டப்படுகின்றனர். கம்பீர், யுவராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நெஹ்ரா இன்னும் அதிக போட்டிகளில் சேர்க்கப்பட வேண்டும் " என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிட்னஸ் காட்டிய நெஹ்ரா
இந்திய அணியில் விளையாடுவதற்கு பெரும்பாலும் நிறைய வித்தியாசமான உடல் தகுதித் தேர்வுகள் வைக்கப்படும். யோ யோ தேர்வு என அழைக்கப்படும் இந்த பிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இதில் செய்யப்படும் அனைத்து விதமான உடல் சோதனைகளையும் கடந்து மீண்டும் அணியில் இணைந்துள்ளார் நெஹ்ரா. இப்போது இருக்கும் இளம் வீரர்களின் அதே உடல் தகுதியோடு நெஹ்ரா இருப்பதாக இந்திய கிரிக்கெட் தேர்வு கமிட்டி தெரிவித்துள்ளது.
பிளேயிங் லெவனில் நெஹ்ரா
பெரும்பாலும் நெஹ்ரா பிளேயிங் 11-ல் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கூடுதல் ஸ்பீட் பவுலருடன் களம் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அணியில் நெஹ்ரா நீடிப்பார் என எதிர்பார்க்கலாம் .