ஷார்ஜா: நேபாள், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று டி20 போட்டிகள் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இரண்டு முறை உலக சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணியை நேபால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நேபால் அணி தொடக்க வீரர்கள் ஆசிப் ஷேக் 3 ரன்களிலும், குஷன் ஆறு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் கேப்டன் ரோஹித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

இதேபோன்று குஷல் மல்லா 21 பந்துகளில் 30 ரன்களும், குல்சான் ஜா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தனர்ம் இறுதியில் டிபேந்திரா 19 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் நேபால் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனை அடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அதிரடி வீரர் கயல் மேயர்ஸ் ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
அமீர் ஜாங்கோ 19 ரன்களிலும், அக்கிம் 15 ரன்களிலும் ஜிவல் ஆண்டிரூ ஐந்து ரன்களிலும் கேசி கார்ட்டி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் நடுவரிசை வீரர் நவீன் 25 பந்துகள் எதிர்கொண்டு அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார். கேப்டன் அகில் உசேன் மட்டும் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கு பின்தங்கி இருக்கின்றது. இரண்டாவது டி20 போட்டி திங்கட்கிழமையும் மூன்றாவது டி20 போட்டி செவ்வாய் கிழமையும் நடைபெறுகிறது.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேப்படி எட்டு மணிக்கு தொடங்குகிறது.