காத்மாண்டு : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை சாம்பியன் ஆன இந்திய அணியுடன் நேபாள அணி முதல் முறையாக பலப் பரிட்சை நடத்த உள்ளது. சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
நேபாளம் அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமே இல்லை. எனினும் ஒரு நாள் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மேலும் மழை வேறு பெய்து கொண்டிருப்பதால் டக்வொர்த் விதி எப்படி வேண்டுமானாலும் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கலாம். இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேபாள அணி முதலில் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பிறகு பாபர் அசாம் மற்றும் இப்திகார் அஹமத் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய வெற்றியை பெற்றனர்.
இந்த நிலையில் இந்தியாவை அதே உத்வேகத்துடன் நேபாள அணி எதிர்கொள்ள உள்ளது. தற்போது இந்தியாவை காட்டிலும் நேபாளத்தில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாகி வருகிறது. நேபாள அணி எந்த ஒரு சின்ன போட்டியில் விளையாடினாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அணி வீரர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை நேபாள நாட்டு மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நேபாள வீரர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில் அந்த நாட்டை சேர்ந்த அர்ணா பீர் மதுபான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட்டை எந்த ஒரு நேபாள் வீரர் வீழ்த்தினாலும், அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும் இந்திய அணிக்கு எதிராக நேபாள வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இந்திய அணிக்கு எதிராக நேபாள வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் தலா 25,000 ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேபாள வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை அர்ணா பீர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.