பாலக்கலே: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் 5வது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நேபாள அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகளில் யார் வெல்கிறார்களோ அவர்கள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் நேபாள அணி சார்பாக குஷால் - ஆசிஃப் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கத்திலேயே குஷால் அதிரடியாக ஆடிய நிலையில் நேபாள அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே 4 ஓவர்களுக்குள் இந்திய வீரர்கள் 3 கேட்ச்களை கோட்டைவிட்டனர். முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக ஆடிய குஷால் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த பீம் 7 ரன்களிலும், கேப்டன் ரோகித் 5 ரன்களிலும், குஷால் மல்லா 2 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினர். இதனால் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நேபாள அணி தடுமாறியது. இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஆசிஃப் ஷேக் அரைசதம் கடந்து அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த குல்ஷன் ஷா - திபேந்திரா சிங் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதில் குல்ஷன் ஷா 23 ரன்களில் ஆட்டமிழக்க, சோம்பால் கமி களமிறங்கினார். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி நேரத்தில் அதிரடியாக இரு சிக்சர்களை பறக்கவிட, இந்திய பவுலர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சிறப்பாக ஆடிய சோம்பால் ஆட்டத்தால் நேபாள அணி 200 ரன்களை கடந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோம்பால் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த சந்தீப் லெமிச்சானே 9 ரன்களிலும், லலித் டக் அவுட்டாக நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரிய இலக்கு இல்லையென்றால் சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், டாப் ஆர்டர் சொதப்பினால் இந்திய அணி வெளியேறும் நிலை உருவாகும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.