பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. இந்த பக்கம் இலங்கை அணிக்கு 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தகுதிபெற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரேராவின் அரைசதம் மற்றும் தீக்சனாவின் பொறுப்பான ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர், ஃபெர்குசன் மற்றும் ரச்சின் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தரப்பில் டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா தொடக்கம் கொடுத்தனர். முதல் 4 ஓவர்களில் இருவரும் நிதானம் காட்டி வந்த நிலையில், 5வது ஓவரில் கான்வே 14 ரன்களை விளாசினார். அதன்பின் நியூசிலாந்து வீரர்களின் அதிரடி உச்சத்திற்கு சென்றது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸ் என்று இருவரும் பொளந்து கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கான்வே 45 ரன்களிலும், ரச்சின் 42 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த வில்லியம்சன் 14 ரன்களிலும், சாப்மேன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இருப்பினும் டேரில் மிட்செல் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஆனால் 43 ரன்களில் எடுத்திருந்த நிலையில் அவரும் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின் இணைந்த பிலிப்ஸ் - லேதம் கூட்டணி நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் அரையிறுதி சுற்று வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடினாலே பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.