WTC ஃபைனல் முடிந்த பிறகு.. ஐபிஎல் பற்றி வெளியான "திடீர்" அறிவிப்பு.. எதிர்பார்க்காத ரசிகர்கள்
மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவடைந்திருக்கும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த புதிய தகவலை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
தோல்வி ஒருபக்கம் இருந்தாலும், பெரியளவில் போராட்டமின்றி இந்திய அணி சரண்டரானது தான் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றமடையச் செய்தது. ரோஹித் ஷர்மா முதல் ஜடேஜா வரை, பேட்டிங்கிலும் எவருமே ஜொலிக்கவில்லை. ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் படி போராடவில்லை.

நியூசிலாந்தின் சோகம்
எனினும், பல ஆண்டுகளாக உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. குறிப்பாக, 2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், மேட்ச் டிராவாகி, இரண்டு முறை நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவாகி, இங்கிலாந்திடம் கோப்பையை நியூசிலாந்து பறிகொடுத்தது எல்லாம் வேதனையின் உச்சம்.

வெளிநாட்டு வீரர்கள்
அந்த வகையில், நியூசிலாந்து இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்றதை இந்திய ரசிகர்களே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் தான் ஐபிஎல் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆம்! கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. ரசிகர்களை இத்தொடரை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் இந்த சூழலில், வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது கடினம் என்று கூறப்பட்டது. குறிப்பாக, இங்கிலாந்து, வங்கதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட்.காமிடம் பேசிய ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், "நாங்கள் இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்த ஒருமித்த கருத்துக்கு வர பி.சி.சி.ஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஹேப்பி நியூஸ்
இதன்மூலம், ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணி வீரர்கள் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பெங்களூரு அணியில் கைல் ஜேமிசன், டிம் சீஃபர்ட், ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, பெர்குசன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஃபின் ஆலன் ஆகிய நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications