நெல்சன் : வங்கதேச வீரர் சவும்யா சர்க்கார் 14 வருட சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து கிரிக்கெட் அரங்கை அதிர வைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியின் துவக்க வீரர் சவும்யா சர்க்கார் தனி ஆளாக நின்று போராடி சதம் அடித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், துவக்க வீரர் சவும்யா சர்க்கார் நிலையாக நின்று சதம் அடித்தார். முதல் ஓவர் முதல் 49.1வது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் ஆடிய சவும்யா சர்க்கார் 151 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார். தனது ஆட்டத்தில் 22 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார்.
இந்த சதம் மூலம் 14 வருட சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். நியூசிலாந்து மண்ணில் 2009ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆக இருந்தார். நியூசிலாந்து மண்ணில் ஆசிய வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.
அந்த சாதனையை நியூசிலாந்து சென்ற வேறு எந்த ஆசிய வீராராலும் முறியடிக்க முடியாத நிலையில், சவும்யா சர்க்கார் அந்த சாதனையை 169 ரன்கள் குவித்து முறியடித்தார். மேலும், வங்கதேச வீரர் ஒருவர் வெளிநாட்டில் நடந்த ஒருநாள் போட்டியில் குவித்த அதிகபட்ச ரன் இதுதான்.
அதே போல, இந்தப் போட்டியில் 291 ரன்கள் குவித்தது வங்கதேசம். ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். வங்கதேசம் அணி மற்றும் சவும்யா சர்க்கார் இத்தனை சாதனைகள் செய்தும் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் வில் யங் 89 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்களும் எடுத்தனர். அதை அடுத்து நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவும்யா சர்க்காரின் சதம் வீண் ஆனது.