மும்பை: இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலமாக ஈட்டி வரும் வருமானம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டின் முகமாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு வெளியிலும் விராட் கோலியின் புகழ் பரவி வருகிறது. அந்த அளவிற்கு விராட் கோலியை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

256 மில்லியனுக்கும் அதிகமானோர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் கற்பனைக்கு எட்ட முடியாத வருமானத்தை விராட் கோலி ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியது. அதன்படி விராட் கோலி பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.25 கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு ரூ.3.25 கோடி வரை மட்டுமே வருமானம் ஈட்டி வந்த நிலையில், தற்போது 2023ஆம் ஆண்டின் 8 மாதத்திலேயே இன்ஸ்டாகிராமின் ஒரு பதிவிற்கான வருமானம் ரூ.8 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதேபோல் நட்சத்திர கால்பந்து வீரர்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவருக்கும் பின் அதிக வருவாயை இன்ஸ்டாகிராம் மூலமாக விராட் கோலி ஈட்டுவதாகவும் தகவல் வெளியாகியது.

இதன் காரணமாகவே விராட் கோலி அண்மை காலமாக இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகம் ஆக்டிவாக இருப்பதாகவும் ரசிகர்களிடையே கருத்துகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் வருவாய் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், என் வாழ்க்கை தற்போது வரை பெற்றுள்ள அனைத்திற்கும் நன்றியுள்ளவதாக, கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன். அதேபோல், சமூக வலைதளங்கள் மூலம் நான் ஈட்டி வரும் வருமானம் பற்றி தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.