ட்ரினிடாட்: 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் இந்த அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேனாகப் பார்க்கப்பட்டு வருகிறார் நிக்கோலஸ் பூரன். இந்த நிலையில், 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 167 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அவர் அதிரடியாக பேட்டிங் செய்து வருவதால், அவருக்கு அனைத்து டி20 தொடர்களிலும் வரவேற்பு உள்ளது. ஐபிஎல் தொடரிலும் அவருக்கு அதிக வரவேற்பு உள்ளது. தற்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இருந்து நிக்கோலஸ் பூரன் பின்வாங்கி இருந்தார். அவர் கடைசியாக 2024 டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை 2023 ஜூலையில் கடைசியாக விளையாடியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.
நிக்கோலஸ் பூரன் 61 ஒருநாள் போட்டிகளில் 1983 ரன்கள் எடுத்திருக்கிறார். 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2275 ரன்கள் எடுத்திருக்கிறார். தனது நாட்டு அணிக்காக டி20 போட்டிகளில் எடுத்த ரன்களை விட ஐபிஎல் தொடரில் அவர் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அவர் 90 போட்டிகளில் விளையாடி 2293 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதேபோல உலகின் பல்வேறு டி20 தொடர்களில் நிக்கோலஸ் பூரன் முக்கியமான வீரராக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 524 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 190 ஆக இருந்தது. அவரது அதிரடி ஆட்டத்திற்காகவே அவருக்கான மதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து நிக்கோலஸ் பூரன் கூறியதாவது:
"நீண்ட யோசனைக்குப் பிறகு நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நாம் மிகவும் விரும்பிய இந்த விளையாட்டு நமக்கு தொடர்ந்து மகிழ்ச்சி, நோக்கம் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை அளித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மக்கள் சார்பாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. மெரூன் நிற உடையை அணிந்து, தேசிய கீதத்திற்காக நின்று, நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் ஆடுகளத்தில் நுழைவது என்பது எனக்கு எத்தனை முக்கியம் என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்படி ஒரு அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியது எனக்குக் கிடைத்த கவுரவம். அதை நான் எனது இதயத்திற்கு அருகே வைத்துக் கொள்வேன்.
எனது ரசிகர்களுக்கு, என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தியதற்கு நன்றி. எனது கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எனது நல்ல தருணங்களில் அதை கொண்டாடி இருக்கிறீர்கள். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக அணி வீரர்களுக்கு, என் உடன் இந்த பயணத்தில் நீங்கள் ஒன்றாக வந்ததற்கு மிகவும் நன்றி. உங்களது நம்பிக்கை மற்றும் ஆதரவுதான் என்னை இத்தனை தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனது சர்வதேசப் பயணம் இந்த இடத்துடன் முடிவுக்கு வந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மீதான எனது அன்பு எப்போதும் மறையாது. இந்த அணியும் இந்த பகுதியும் வெற்றி தவிர வேறு எதையும் பார்க்காமல் தொடர்ந்து பலத்துடன் பயணிக்க வேண்டும்," இவ்வாறு நிக்கோலஸ் பூரன் தனது ஓய்வு அறிவிப்பில் கூறி இருக்கிறார்.