ட்ரினிடாட்: சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 51 பந்துகளில் சதம் விளாசிய நிக்கோலஸ் பூரனின் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பம்பட்டியில் ஏதாவது ஒரு டி20 லீக் நடைபெற்றாலும் கூட வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்று சில மீம்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இப்போதும் ரஸ்ஸல், நரைன், லூவிஸ் உள்ளிட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது. அந்த பிரச்சனையை இளம் வீரரான நிக்கோலஸ் பூரன் சரிசெய்து வருகிறார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற எம்எல்சி லீக்கின் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக பூரன் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதே ஃபார்மில் இந்திய அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்த ஹர்திக் பாண்டியாவும் பதிலுக்கு சவால் விட்டு தோல்வியடைந்தார்.
அந்த அளவிற்கு நிக்கோலஸ் பூரனின் அதிரடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிபிஎல் லீக் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய பூரன், 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் இளம் வீரரான நயிம் யங் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார் பூரன்.
பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் சென்று கொண்டிருக்க, கடைசி ஓவரில் இரு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி 51 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் நிக்கோலஸ் பூரன். அதில் 10 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். சிபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். இதன் காரணமாக ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே சேர்க்க, ட்ரின்பாகோ அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக சதம் விளாசிய நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரில் கம்பீரின் செல்லப் பிள்ளையான நிக்கோலஸ் பூரன், சிபிஎல் தொடரில் வெளுத்து வாங்குவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.