லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய பந்துவீச்சாளர்களில் ஒருவரின் எகனாமி ரேட் கூட 3க்கு குறைவாக இல்லாதது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வினை அணியில் வைத்திருக்க வேண்டும், பும்ரா இருந்திருக்க வேண்டும், இஷாந்த் சர்மாவை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை, ஷர்துல் தாக்கூர் எப்போது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.. நேற்று இரவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி கொண்டே வருகிறார்கள். காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவிலேயே 327 ரன்களை குவித்ததுதான்.

முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் இலக்கின்றி, திட்டமில்லாமல் பந்துவீசுவதை போலத்தான் இந்திய அணியின் பந்துவீச்சு அமைந்தது. விக்கெட்டிற்கு வீச வேண்டுமா, ரன் ரேட்டை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற தெளிவு கூட இல்லாமல் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அமைந்தது. அவர்களுக்கு ஆலோசனை சொல்ல கூட ரோகித் சர்மாவிடம் எந்த திட்டமும் இல்லாதது பெரும் சோகம்.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா என்று 5 பேரின் எகனாமி ரேட்டில் ஒருவர் கூட 3க்கு குறைவாக இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரன் ரேட்டை கட்டுப்படுத்தினால் விக்கெட் கிடைக்கும் என்ற அடிப்படை திட்டத்தை கூட இந்திய பந்துவீச்சாளர்கள் மறந்து விளையாடி இருப்பது தான் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.
ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது என்றாலும், எகனாமி ரேட் 3ஐ கடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அஸ்வினுக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட ஷர்துல் தாக்கூரின் எகனாமி 4.17ஆக உள்ளது. இன்னொரு பக்கம் குறைவான ஓவர்களை வீசிய ஜடேஜாவின் எகனாமி கூட 3.43ஆக உள்ளது. இதனால் 2ஆம் நாள் ஆட்டத்தின் இந்திய பந்துவீச்சாளர்கள் மேலும் ரன்களை வாரி வழங்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட்டை போல் அதிரடியாக விளையாடினாலும் ஆச்சரியமில்லை.