மும்பை: இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் லெக் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமையுடன் இருக்க வேண்டும் என்று கூறிய முகமது கைஃப், சஞ்சு சாம்சனை உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பொதுமேலாளர் அம்ரித் மாத்தூர் எழுதியுள்ள "Pitchside: My Life in Indian Cricket" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய முன்னாள் வீரர்களான வீரேந்தர் சேவாக், முகமது கைஃப் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் மற்றும் உலகக்கோப்பைத் தொடர் குறித்து ஏராளமான கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த அரைசதம் சிறப்பாக இருந்தது. 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த போதும், அசராமல் சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டத்தை பார்த்து பிரமித்துவிட்டேன். அவரின் ஆட்டத்தின் தாக்கத்தை நன்றாக உணர முடிகிறது. என்னை பொறுத்தவரை அவர் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகிவிட்டதாகவே நினைக்கிறேன்.
4 அல்லது 5 ஆகிய இடத்தில் சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும். அவருக்கு பதில் இஷான் கிஷன் அல்லது அக்சர் படேலை களமிறக்குவது சரியாக இருக்காது என்றே நினைக்கிறேன். 4வது வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கிய போது, அதுதான் அவருக்கான கடைசி உலகக்கோப்பை வாய்ப்பு என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஒருவேளை சஞ்சு சாம்சன் சில ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்திருந்தால், இந்திய அணியின் உலகக்கோப்பை கனவுகள் மூடப்பட்டிருக்கும். இந்த அழுத்தங்களுக்கு நடுவில் 2வது பந்திலேயே சஞ்சு சாம்சனால் பதற்றமின்றி சிக்சர் அடிக்க முடிகிறது.

இதனால் தான் சஞ்சு சாம்சன் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகிவிட்டார் என்று சொல்கிறேன். அதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமையை பெற்றிருக்க வேண்டும். இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல் ஆகியோர், அதில் பின்னடைவை சந்திக்கிறார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கண்டு வருகிறார். அதனால் தான் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதேபோல் உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெற முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஆட்டத்தை வைத்து யாரையும் முழுமையாக விமர்சிக்க முடியாது. அதனால் இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் எந்த பரிசோதனையும் இல்லாமல், உலகக்கோப்பைத் தொடரை போல் அணுக வேண்டும். சிறந்த பிளேயிங் லெவனை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். ஆசியக் கோப்பைத் தொடரின் போது பிளேயிங் லெவன் யார், பேக் அப் வீரர்கள் யார் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.