அகமதாபாத்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற சூழலில், எந்த பிரஷரும் இல்லாமல் சிக்சரும் பவுண்டரி விளாசி அசத்தினார் ராகுல் டிவாட்டியா.
ஒவ்வொரு முறையும் குஜராத் அணி ஆபத்தில் சிக்கும் போதெல்லாம், அந்த ஆபத்தில் இருந்து காக்கும் பாதுகாவலனாக ராகுல் டிவாட்டியா இருந்து வருகிறார். ராஜஸ்தான் அணியில் இருந்த போது தன்னை நிரூபித்திருந்தாலும், அவருக்கென பிரத்யேக ரோல் அங்கு கொடுக்கப்படவில்லை.

சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பேட்டிங் செய்யும் திறமை உள்ள வீரர் என்ற அடிப்படையிலேயே ராகுல் டிவாட்டியாவை அணுகி வந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போதே ராகுல் டிவாட்டியாவின் முக்கியத்துவத்தை சென்னை மற்றும் புதிதாக கால் பதித்திருந்த குஜராத் அணிகள் உணர்ந்திருந்தன.
அதற்காக தான் 2022ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது ஆர்பிசி மற்றும் குஜராத் அணிகளுடன் ராகுல் டிவாட்டியாவை வாங்குவதற்காக முட்டி மோதியது. கிட்டத்தட்ட ரூ.8.75 கோடி வரை முயன்றும் சென்னை அணியால் ராகுல் டிவாட்டியாவை வாங்க முடியவில்லை. இறுதியாக ரூ.9 கோடி கொடுத்து அவரை குஜராத் அணி வாங்கியது.
அன்று சென்னை அணியிடன் போட்டிப்போட்டு வாங்கிய குஜராத் அணிக்காக இன்று களத்தில் அத்தனை அணிகளுக்கு எதிராக தீவிரமாக சமர் செய்து வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில், ராகுல் டிவாட்டியாவிடம் ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்ட போது அவர், 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
வேறு எந்த வீரராக இருந்தாலும் அவ்வளவு பிரஷரில் இருந்திருப்பார்கள். நிச்சயமாக கடந்த ஓவரில் சிக்சர் விளாசிய ரஷீத் கானிடம் ஸ்ட்ரைக் கொடுத்திருப்பார்கள். ஆனால் ராகுல் டிவாட்டியா எந்த பிரஷரும் அவர் கண்களிலோ, உடல்மொழியிலோ இல்லை. துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே வொய்ட் யார்க்கர் வரும் என்பதை கணித்திருந்தார்.
அதற்காக காத்திருந்து வொய்ட் யார்க்கரையும் சிக்சர் விளாசினார். அதன்பின்னர் அடுத்த பந்தில் ஒரு ஸ்ட்ரைட் பவுண்டரி என்று ஆட்டத்தை முடித்தார். வழக்கம் போல் ராகுல் டிவாட்டியாவின் ட்ரேட் மார்க் கொண்டாட்டத்துடன் போட்டி நிறைவடைந்தது. ராகுல் டிவாட்டியா ப்ளூக்கில் அடிப்பதாக சில விமர்சனங்கள் வருகின்றன. அவரின் ஆட்டத்தை உன்னித்து பார்த்தால், அவரது பேட்டிங்கில் எந்த ஷாட்டும் மிஸ் டைமிங் இருக்கவே இருக்காது.
அத்தனை பவுண்டரிகளும் க்ளீன் ஹிட் தான். அதுதான் ராகுல் டிவாட்டியாவின் ஸ்பெஷல். இன்னும் சொல்லப் போனால் தல தோனி எவ்வளவு மன உறுதியுடன் இருப்பாரோ, அதே அளவுக்கு நம்பிக்கையுடன் ஃபினிஷிங் ரோலில் ராகுல் டிவாட்டியா காணப்படுகிறார். இந்தப் போட்டி மட்டுமல்லாமல், இன்னும் ஏராளமான போட்டிகளையும் அவரால் இதுபோல் ஃபினிஷ் செய்ய முடியும். ஐபிஎல் தொடரில் ரியல் ஃபினிஷராக தனது ரோலை செய்ய தொடங்கிவிட்டார் ராகுல் டிவாட்டியா.