
கோப்பை வென்ற மும்பை அணி
ஐபிஎல் 2020 தொடர் யூஏஇயில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய ஐந்தாவது கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து ரோகித் சர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

சிறப்பான செயல்பாடு
இடையில் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் ரோகித் சர்மா தனது அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து அவரை இந்திய அணியின் குறைந்த ஓவர்கள் வடிவத்தின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

பொறுப்பை மாற்றும் அவசியம் இல்லை
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி குறைந்த ஓவர்கள் வடிவங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா குறித்து விஜய் லோக்கப்பள்ளி மற்றும் ஜி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள தி ஹிட்மேன் : தி ரோகித் சர்மா ஸ்டோரி என்ற புத்தக வெளியீட்டில் பங்கேற்ற அவர் இதனை குறிப்பிட்டார்.

அவசியம் இல்லை
ஐந்து முறை ஒரு அணியை வெற்றிபெற செய்வது சாதாரண விஷயமில்லை என்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியவர் ரோகித் சர்மா என்றும் லஷ்மன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டனாக ஆவதற்கு எல்லா தகுதிகளும் ரோகித்திற்கு உள்ளதாகவும் ஆனால் தற்போது அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இயல்பான திறமை
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித்திற்கு அளித்தபோது அவர் தன்னம்பிக்கையுடன் அதை எதிர்கொண்டார் என்றும் அவருக்கு அது இயல்பாகவே வந்தது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கான நேரம் வரும்போது கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











