ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூட சக வீரர்கள் இல்லாததால், உள்ளூர் வீரர்களின் உதவியை இந்திய அணி நிர்வாகம் நாடியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் முதல் இரு போட்டிகளில் ஆடிய ஷர்துல் தாக்கூர் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

அதேபோல் ஹர்திக் பாண்டியா 3வது ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியில் 13 வீரர்கள் மட்டுமே இருந்தனர். அதில் இஷான் கிஷனுக்கு திடீரென வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனால் பங்கேற்க முடியவில்லை. ஹோட்டலிலேயே தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 12ஆக குறைந்தது. அதில் 11 வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டு களமிறங்கியுள்ளனர். அஸ்வின் மட்டுமே ஓய்வறையில் அமர்ந்திருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு தண்ணீர் கொடுக்க கூட வீரர்கள் இல்லாத சூழல் அமைந்துள்ளது.
இதனை புரிந்து கொண்ட இந்திய அணி நிர்வாகம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் உதவியை நாடியுள்ளது. ஃபீல்டிங் செய்து வரும் இந்திய வீரர்களுக்கு உதவியாக தண்ணீர், துண்டு, உற்சாக பானம் உள்ளிட்டவை வழங்குவதற்காக ராஜஸ்தான் மாநில அணியில் விளையாடி வரும் தர்மேந்திர ஜடேஜா, பிரீரக் மன்கட், விஷ்வராஜ் ஜடேஜா மற்றும் ஹர்திக் தேசாய் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை கூட அறியாமல் அத்தனை வீரர்களுக்கு ஒன்றாக ஓய்வு வழங்கியதன் விளைவாகவே இந்திய அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.