பார்பிடாஸ் : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார். டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் தற்போது முதல் ஒரு நாள் போட்டி பாரம்பரியமிக்க பார்படாசில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாடப் போகும் கடைசி பத்து போட்டிகள் என்பதால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்க்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். இதற்குப் பின்னால் குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு சில வித்தியாச முயற்சிகளை செய்ய இருக்கிறோம். உலகக்கோப்பை தொடரில் தெளிவான திட்டத்துடன் அணுக இருக்கின்றோம்.
அணியில் சில மாற்றங்கள் செய்தாலும் போட்டியில் முடிவும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். இதனால் நாங்கள் முடிவை பாரபட்சமாக விட்டு விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நான்கு வேகபந்துவீச்சாளர்கள், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்க போவதாகவும் ரோகித் சர்மா கூறினார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில், எங்களுக்கு அனைத்து தொடருமே மிகவும் முக்கியமானதாக தான் நினைக்கிறேன். இந்த தொடரை வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம். டாப் அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட இது நல்ல வாய்ப்பாக கருதுகிறோம். எங்கள் அணியிலும் நல்ல சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
உலகக் கோப்பை தகுதி சுற்றில் நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டோம். இதனால் பில்டிங்கில் நாங்கள் கவனம் செலுத்த நினைக்கிறோம். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதல் சில மணி நேரம் பொறுமை காத்து அதன் பிறகு எங்களுடைய இலக்கை மாற்றி நிர்ணயித்துக் கொள்வோம். இந்தியாவுக்கு எதிராக பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வோம் என்று அவர் கூறினார்.இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக இசான் கிஷனுக்கு முன்னுரிமை வழங்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சஞ்சு சாம்சன் தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்தும் ரோகித் சர்மா இசான் கிஷனுக்கு தான் முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதனால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தாரா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்று இரண்டாவது சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜாவுக்கு துணையாக குல்தீப் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.