ஒருநாள் போட்டியே ரோகித் களம்.. கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் வருவார்..தினேஷ் கார்த்திக் கணிப்பு!
மும்பை: ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்க தொடங்கினால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதேபோல் கே.எல்.ராகுல் 5வது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் விளையாட உள்ளனர்.
இந்த தொடர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் முதல் படியாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. சரியாக காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்கின் அகமது காயம்
இதனிடையே வங்கதேச அணியின் முக்கிய பந்துவீச்சாளரான டஸ்கின் அகமது காயம் காரணமாக விலகியுள்ளார். இதுகுறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விலகி இருப்பது இந்திய அணிக்கு சாதகம் தான். வங்கதேச அணிக்காக அறிமுக ஓவர்களை சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வந்துள்ளார்.

தவான், ரோகித்
டி20 உலகக்கோப்பைத் தொடரில் டஸ்கின் அகமது என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இல்லாதது இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் - ரோகித் சர்மா ஆகியோருக்கு சாதகமாக இருக்கிறது. முஷ்டஃபிகுர் ரஹ்மான் இருந்தாலும், டஸ்மன் அகமது இல்லாமல் வங்கதேச அணியால் அறிமுக ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது எளிதாக இருக்காது என்று தெரிவித்தார்.

ரோகித் சர்மாவை தடுக்க முடியாது
தொடர்ந்து ரோகித் சர்மா பற்றி கூறுகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தவிர்க்க முடியாத வீரர். கேப்டன்சியை கையில் எடுத்ததில் இருந்து அதிகளவில் ரோகித் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடவில்லை. தற்போது மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்க உள்ளார். ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்க தொடங்கினால், யாராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.

5வது வீரராக கே.எல்.ராகுல்
டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் 2 முதல் 3 வாரங்களாக ஓய்வில் இருக்கிறார்கள். இதனால் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி விளையாட அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல் இந்த தொடர் அமைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா, தவான் ஆகியோரை தவிர்க்க முடியாது. மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்குவார்கள். அதனால் கே.எல்.ராகுல் 5வது வீரராக வருவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications