லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக இந்திய அணி வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களின் சொதப்பல்களே இந்த தோல்விக்கு காரனமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக டெஸ்ட் போட்டிக்கு திரும்பியதே தோல்விக்கு மற்றொரு காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், 444 ரன்கள் என்ற இலக்கு அவ்வளவு எளிதல்ல. வென்றுவிடுவோம் என்று நம்பிக்கையாக இருந்தோம். ஆனால் வெல்ல வேண்டுமென்றால், நிச்சயம் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் தேவை என்பதையும் உணர்ந்திருந்தோம். அதேபோல் முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் அடிக்கக் கூடிய வகையிலான பிட்ச் அல்ல இது. இந்திய அணி வீரர்களுக்கு என்ன லைன் மற்றும் லெந்த் வீச வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் சிறிது ஒய்டாக வீசி அடி வாங்கி இருக்கிறோம்.
இந்திய பேட்ஸ்மேன்கள் சில ஷாட்களை விளையாடிய போது கவனமாக இருந்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்தற்கு எளிதாக இருக்கும். 2வது இன்னிங்ஸில் விரைந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்,. இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் வென்றார்கள். ஆனால் இன்று அவர்களின் தரத்திற்கு பேட்டிங் செய்யவில்லை.

ஒவ்வொரு முறையும் கோப்பைக்கு அருகில் வந்து தோல்வியை சந்திக்கிறோம். ஆனால் முக்கிய ஆட்டங்களில் சொதப்புகிறோம். அதேபோல் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக இந்திய வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஒரு பயிற்சியாளராக நிச்சயம் அதில் மகிழ்ச்சி இல்லை. மூன்று வாரங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து வந்து, பயிற்சிப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அதேபோல் தோல்விக்கும் அதுதான் காரணம் என்று சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.