மொஹாலி: இந்திய அணி பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லாதது குறித்து கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான் என்று முக்கிய பந்துவீச்சாளர்களை கடந்து பார்ட் டைம் பந்துவீச்சாளர்களே பயங்கரமான பந்துவீச்சாளர்களாக இருந்தனர். இவர்களை கொண்டே அப்போதைய கேப்டன் தோனி, ஒவ்வொரு போட்டியில் 10 முதல் 15 ஓவர்களை வீசிவிடுவார். இதனால் முக்கிய பந்துவீச்சாளர்களுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கும்.

ஆனால் தற்போதைய இந்திய அணியில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் என்று யாருமே கிடையாது. ரோகித் சர்மா, கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் என்று யாருமே 2 ஓவர்களை கூட வீச முன்வருவதில்லை. இதனால் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஷ்வால் உள்ளிட்டோரை தொடக்கத்திலேயே சில ஓவர்களை வீச வைத்து இந்திய அணி நிர்வாகம் பழக்கப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. இதனை முன்னிட்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் டிராவிட்டிடம் இந்திய அணியில் பார்ட் டைம் பவுலர்கள் யாருமே இல்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், பார்ட் டைம் பவுலர்கள் குறைந்ததற்கு விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதே காரணம் என்று நினைக்கிறேன்.
30 யார்ட் வளையத்திற்குள் திடீரென 5 வீரர்கள் இருக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வரப்பட்டது முக்கியமான காரணம். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் விளாசியதால், அனைவரும் பார்ட் டைம் பவுலர்களை பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டவில்லை. 30 யார்ட் வளையத்தில் 4 வீரர்கள் அனுமதிக்கப்பட்ட போது, ஏராளமான வீரர்கள் தைரியமாக கைகளை சுழற்ற தயாராகினார்கள்.
அப்போது இந்தியா மட்டுமல்லாமல், ஏராளமான அணிகளில் பார்ட் டைம் பவுலர்கள் இருந்தார்கள். தற்போதைய சூழலில் இந்தியா மட்டுமல்லாமல் மற்ற அணிகளிலும் பார்ட் டைம் பவுலர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதேபோல் இரு புதிய பந்துகள் என்ற விதிகள் உள்ளது. இந்த விதிமுறை பார்ட் டைம் பவுலர்களுக்கு மேலும் சிக்கலை அளிக்க கூடியது என்று தெரிவித்துள்ளார்.