மும்பை: 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி மட்டுமல்லாமல் உடன் ஆடிய 10 வீரர்களும் முக்கிய காரணம் என்று ரசிகர் ஒருவரின் ட்வீட்டிற்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. விராட் கோலியின் கேப்டன்சியால் தான் இந்திய அணி தோல்வியடைகிறது என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக வந்தும் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் சொதப்பல்கள் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இதனால் பலரும் தோனியின் கேப்டன்சியை பாராட்டி வருகின்றனர்.

ஏனென்றால் டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று அடுத்தடுத்து இந்திய ரசிகர்களுக்கு ஐசிசி டிராபிகளை வென்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் தோனி மட்டுமே. அதுமட்டுமல்லாமல் கோப்பைகளை எப்படி வெல்ல வேண்டும், ஒரு அணியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்கட்டாக இப்போதும் தோனி சிஎஸ்கே அணி மூலமாக செயல்பட்டு வருகிறார். இதனால் தோனியை போல் மீண்டும் ஒரு கேப்டன் கிடைப்பாரா என்ற ரசிகர்கள் பலரும் நேற்று முதல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி பற்றி ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பயிற்சியாளர், ஆலோசகர், சீனியர் வீரர்கள், கேப்டன்சி அனுபவம் என்று எதுவும் இல்லை. கேப்டனான 48 நாட்களில் இளம் வீரர்களுடன் சென்று உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பையும் வென்ற கேப்டன் தோனி என்று கருத்து பதிவிட்டார்.
https://twitter.com/Itzshreyas07/status/1667866253678243840
இந்த ட்வீட்டால் கோபமடைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளார். அதில், ஆமாம்.. இந்தப் போட்டிகளை எல்லாம் இந்தியாவில் இருந்து தனியாக சென்ற ஒரு இளம் வீரர் மட்டும் தான் ஆடினார்.. மீதமுள்ள 10 வீரர்கள் விளையாடவே இல்லை.. அதனால் உலகக்கோப்பையையும் தோனி மட்டுமே தனியாக வென்றார்.. இதில் முரண் என்னவென்றால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உலகக்கோப்பையை வென்றால், ஆஸ்திரேலியா வென்றதாகவே தலைப்புகள் இருக்கும்.

ஆனால் ஒரு இந்தியர் கோப்பையை வென்றால், அங்கு கேப்டன் வென்றுவிட்டார் என்று சொல்கிறார்கள். கிரிக்கெட் என்பதே ஒரு குழு விளையாட்டு.. நாங்கள் ஒன்றாக எப்படி வெல்கிறோமோ, அதேபோல் ஒன்றாகவே தோற்கவும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு ரசிகர்கள், நிச்சயம் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு தான். ஒரு கோப்பையை வெல்வதற்கு 10 பேரின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. ஆனால் மீதமுள்ள 10 வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான் கேப்டன்சி. அதுதான் திறமை. 41 வயதிலும் சிஎஸ்கே அணி வீரர்களிடம் திறமையை வெளிக் கொண்டு வந்து கோப்பையை வெல்ல வைத்ததே சிறந்த எடுத்துக்காட்டு என்று பதிலளித்து வருகின்றனர்.