22 பந்தில் 57 ரன் அடித்த சாம்சனுக்கு ஒண்ணுமே இல்லை.. 3 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வெறும் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அதிரடி காட்டி, இந்திய அணி எளிதாக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய 23 வயது இளம் ஆல்-ரவுண்டருக்குதான் இந்த விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சன் மின்னல் வேக தொடக்கம் அளித்தார். வெறும் 20 பந்துகளில் தனது சர்வதேச டி20 அரைசதத்தை எட்டிய அவர், மொத்தம் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தொடக்க வீரராக 1000 ரன்களைக் கடந்த 5-வது இந்திய பேட்டர் என்ற பெருமையை ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தவான் வரிசையில் சஞ்சு சாம்சன் பெற்றார்.

ஆனால், சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஆட்டத்தை விட நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சே ஆட்டத்தின் திருப்புமுனையாகக் கருதி அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் நிதிஷ் ரெட்டி முக்கியப் பங்கு வகித்தார். அவர் 3 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே வழங்கி, ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரான், குல்பதின் நைப் மற்றும் ரஷித் கான் ஆகிய 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசிய நிதிஷ் ரெட்டி, "காயத்தில் இருந்து மீண்டு வந்து அணிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக உருவாக வேண்டும் என்ற நோக்கில் எனது பந்துவீச்சு வேகத்தை அதிகரித்துள்ளேன். மீண்டும் காயங்கள் ஏற்படாமல் உடற்தகுதியைப் பராமரிப்பதே எனது முக்கிய இலக்கு" என்றார்.
இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர் வெற்றியை உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications

